SJK(TAMIL) METHODIST, MALIM NAWAR - விரைந்து முன்னேறும் தமிழ்ப்பள்ளி

பேரா, மாலிம் நாவார் எனும் ஊரில் மிகவும் எடுப்பான கட்டடத்தோடும் எழிலான தோற்றத்தோடும் தேசிய வகை மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கிறது.

பள்ளியின் வளாகம் மிகச் சிறப்பாக அமைந்துள்ள இப்பள்ளியைச் சுற்றி வருகையில் ஓர் அழகான பூந்தோட்டத்தில் நுழைந்து உலா வந்த உணர்வு எல்லாருக்கும் தோன்றும். அந்த அளவுக்கு மிகவும் அழகான வளாகத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு எப்பிரல் மாதத்தில் இப்பள்ளிக்குப் புதிதாகத் தலைமையாசிரியர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட திருமதி.சுசிலா கில்டா பள்ளியில் பல உருமாற்றங்களைச் செய்து பலரும் வியக்கும் வகையில் பள்ளியை முன்னேற்றி இருக்கின்றார்.

புற நிலையில் மட்டுமல்லாது அக நிலையிலும் பள்ளியில் பல்வேறு உருமாற்றங்களை ஆசிரியர்களின் உதவியோடும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக் குழு உதவியோடும் மிகவும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்.

இப்பள்ளியின் சுவர்களில் அறிஞர் பெருமக்களின் அருமையான பொன்மொழிகள் காட்சி தருகின்றன. எல்லா அறைகளும் தமிழ் அறிஞர் பெருமக்கள், மாமனிதர்கள், மேதைகளின் பெயர்களைத் தாங்கி மிகப் பொலிவுடன் மிளிர்கின்றன. பார்க்கும் இடங்கள் தோறும் தகவல் அட்டைகளும், தகவல் பலகைகளும், இனியத் தொடர்களும் கண்களை ஈர்க்கின்றன.






கல்வி நிலையிலும், விளையாட்டு, புறப்பாட நிலையிலும் இப்பள்ளி முன்னேற்றம் கண்டுவருவதை அவர்களின் அடைவுநிலைகள் காட்டுகின்றன. மாணவர்களின் ஒழுக்கமும் நற்பண்புகளும் நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அருமையான பள்ளியில் கடந்த 05.04.2018 வியாழக்கிழமை பாவாணர் 21ஆம் நூற்றாண்டு கருவள நடுவம் அதிகாரப்படியாகத் திறக்கப்பட்டது கம்பார். ம.இ.கா தொகுதித் தலைவர் மதிப்புமிகு தான் ஸ்ரீ டத்தோ வீரசிங்கம் இந்தக் கருவள நடுவத்தைத் திறந்துவைத்தார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


தான் ஸ்ரீ டத்தோ வீரசிங்கம் குத்து விளக்கேற்றுகிறார்


21ஆம் நூற்றாண்டு அணுகுமுறைக்கு ஏற்ப இந்தக் கருவள நடுவம் மிகவும் அழகாகவும் நவின அமைப்போடும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்மொழிக்குப் பெரும் பங்காற்றியுள்ள ஊழிப் பேரறிஞராகிய மொழிஞாயிறு பாவாணர் பெயரில் கருவள நடுவம் அமைத்துள்ள பள்ளி நிருவாகத்தின் தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது.

பள்ளியின் பெ.ஆ.சங்கத் தலைவர், வாரியக் குழுத் தலைவர், ம.இ.கா பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், தென் கிந்தா மாவட்டத் தலைமையாசிரியர்கள் எனப் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.


திருமதி சுசிலா கில்டா, சுப.சற்குணன், தான் ஸ்ரீ டத்தோ வீரசிங்கம்
ஒரே ஆண்டு இடைவெளியில் மாலிம் நாவார், மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் பெரும் உருமாற்றங்களைச் செய்து பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து மேலும் பள்ளியை முன்னேற்றுவதற்கு எண்ணம் கொண்டுள்ள தலைமையாசிரியர் திருமதி.சுசிலா கில்டா மற்றும் பள்ளி ஆசிரியர்களை மனதாரப் பாராட்டலாம்.

பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்களோடு அமைப்பாளர் சுப.சற்குணன்

Comments

Post a Comment

Popular Posts:-

SJK(T) Daerah LMS - கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை

WORDWALL மூலம் மின் பயிற்சிகள் உருவாக்குவது எப்படி?

iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி?

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

அறிவியல் விழா 2020 - வடபேரா ஆசிரியர்களுக்கான பட்டறை

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Cikgu Suren Rao Cipta Malaysia Book Of Records

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

GEG ASIA PACIFIC CONNECT : பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் காணொலிப் படைப்பு