SJK(T) LDG.SUNGAI KRUIT - ஆஸ்மோ ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் சாதனை
பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஐந்து மாணவர்கள் ஆஸ்மோ ஒலிம்பியாட் (ASMO OLYMPIAD STATE LEVEL) மாநில நிலை கணிதப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்வழி தேசிய நிலை போட்டிக்குத் தேர்வு பெற்று சாதனையும் புரிந்துள்ளனர்.
பேரா மாநில அளவில் இந்தப் பள்ளியிலிருந்து கலந்து கொண்ட ஏழு மாணவர்களில் ஐந்து மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்குத் தேர்வு பெற்று சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இருவர் வெண்கலப் பதக்கமும் (Bronze Award) மூவர் நன்மதிப்பெண் சான்றிதழும் (Merit) பெற்றுள்ளனர்.
இந்த மகத்தான சாதனையைப் படைத்த மாணவர்கள் செல்வி யுவஸ்ரீ ஆண்டு 2 (வெண்கலப் பதக்கம்), செல்வி காவியா ஆண்டு 2 (வெண்கலப் பதக்கம்), செல்வி லோகராணி ஆண்டு 5 (நன்மதிப்பெண் சான்றிதழ்), செல்வன் ஸோமேஸ்வரன், ஆண்டு 5 (நன்மதிப்பெண் சான்றிதழ்) மற்றும் செல்வி மீராஷினி, ஆண்டு 4 (நன்மதிப்பெண் சான்றிதழ்) ஆவர்.
இந்தப் போட்டியில், பேரா மாநிலத்திலேயே ஒரே ஒரு தமிழ்ப்பள்ளியாகக் கலந்துகொண்ட சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலைக்குத் தேர்வு பெற்றுள்ளது என்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இவ்வேளையில், பயிற்சி அளித்த ஆசிரியை செல்வராணி த/பெ உத்திரக்குமாரன் அவர்களுக்கும் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும். மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றி பெற்று பள்ளிக்கு நற்பெயரைத் தேடித் தந்த மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மனதார தெரிவித்துக் கொள்கின்றது என்று பள்ளியின் தலைமையாசிரியர் பெ.பிரகாஷ் தெரிவித்தார்.
Comments
Post a Comment