இந்தோனேசியாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2தங்கம் 1வெள்ளி வென்றனர்

கடந்த ஏப்ரல் 22 முதல் 26 வரை, இந்தோனேசியா சுராபாயா, மாலாங் மாநிலத்தில் மா சூங் பல்கலைக்கழகத்தில் அக்கு அசோசியாசியா (AKU ASOSIASIA) மற்றும் இந்தோனேசியா இளம் ஆய்வாளர் மன்றமும் இணைந்து நடத்திய 2வது அனைத்துலக அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2தங்கம் 1வெள்ளி வென்றனர்.


இப்போட்டியில் பேராக் மாநிலம் மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய வகை முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி 2தங்கமும், தேசிய வகை சுங்கை வாங்கி தோட்ட தமிழ்ப்பள்ளி 1வெள்ளியும் வென்றன. சிறந்த கண்காட்சிக் கூடத்திற்கான விருது மலேசியாவுக்கு கிடைத்தது. தேசிய வகை முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி. தே. தெய்வமலர் நாகேந்திரன் அவர்கள் தட்டிச் சென்றார். மஞ்ஜோங் வரலாற்றில் அனைத்துலக புத்தாக்க போட்டிகளில் பங்கு கொண்டு வென்றது இதுவே முதல் முறையாகும்.

இப்போட்டியில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 81 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுடம் போட்டியிட்டு தங்கமும் வெள்ளியும் வென்றது பெருமைக்குரியது. அறிவியல், படைப்பாற்றல், குழு ஒற்றுமை என மூன்று பிரிவுகளாக நடந்தேறிய  போட்டியில் அனைத்துலக போட்டியாளர்கள் கடும் போட்டியை வழங்கினர். மலேசியா எதிலும் சளைத்தவர்கள் இல்லை என நிரூப்பித்தனர். இப்போட்டியில் பங்கு பெற பெறும் பங்காற்றிய கெடா மாநில திறன் மேம்பாட்டு இயக்கத்தை சேர்ந்த திருமதி ஜெயதேவி அவர்கள், திரு. திருசந்துரு அவர்கள் மற்றும் மஞ்ஜோங் பாரதி முன்னேற்ற இயக்கத் தலைவர் திரு. விஜயன் அவர்களும் ஆவர்.




இன்று சாதனைச் செல்வங்களாக அறியப்பட்டாலும் இதற்கு பக்க பலமாக இருந்த முக்கிம் புண்டுட் பள்ளித் தலைமையாசிரியர் திரு. பொன். பாக்கியநாதன் அவர்களும், சுங்கை வாங்கித் தோட்ட பள்ளித் தலைமையாசிரியை திருமதி. கமலச்செல்வி அவர்களும் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற யுரேகா அறிவியல் புத்தாக்க போட்டியில் மஞ்ஜோங் மாவட்டத்திற்கு வெண்கலப் பதக்கமே கிட்டியது. ஆனாலும் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் இவர்களது கண்டுபிடிப்பில் மேலும் மெருகேற்றி இன்று தங்கத்தையும் வெள்ளியையும் வென்றனர்.

கடந்த  வெள்ளிக்கிழமை பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நாடு திரும்பிய இவர்களை சற்றும் எதிர்பாராத வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என மலர்கொத்து வழங்கி புடைசூழ வரவேற்றனர்.



மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் அனைத்துலக ரீதியில் அதிகமான வெற்றிகளை வாரி குவிக்கின்றனர். இவர்களை மலேசிய அரசாங்கமும், மாநில அரசுகளும், கல்வி அமைச்சும் உரிய அங்கிகாரம் வழங்கினால் இந்த மாணவச் செல்வங்கள் இன்னும் அதிக போட்டிகளில் பங்கு பெறுவதற்கு உந்துதலாக இருக்கும் என்றார் மஞ்ஜோங் பாரதி முன்னேற்ற இயக்கத் தலைவர் திரு. இரா. விஜயன் அவர்கள். அதே வேளையில் மஞ்ஜோங் தமிழ்ப்பள்ளிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் பங்கெடுக்கும் பள்ளிகளுக்கு அரசு சார்பற்ற இயக்கங்கள், ஆலயங்கள், கொடை நெஞ்சாளர்கள் யாவரும் உதவிகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.


வெற்றிபெற்ற மாணவர்களைப்  பாராட்டும் வகையில் ஈப்போவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பாராட்டு விழா நடைபெற்றது. பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவக்குமார் அவர்கள் கலந்துகொண்டு சாதனை மாணவர்களுக்குச் சிறப்பு செய்தார்.


Comments